வால்மார்ட்டின் பிளிப்கார்ட் இ-காமர்ஸ் வணிக நிறுவனம் நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளையும், வரி விதிப்புச் சட்டங்களையும் கடுமையாக மீறி வருகிறது எனவே பிளிப்கார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
ந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பிளிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், லட்சக்கணக்கான உள்ளூர் விற்பனையாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் மற்றும் 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு திறம்பட்ட சேவையை வெளிப்படைத்தன்மையோடு வழங்க தொழில்நுட்பம் மற்றும் புதுவகை உத்திகளை கடைப்பிடிக்கிறோம்.
இதே வெளிப்படைத்தன்மையுடன் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அதாவது இந்தியாவின் வரி விதிமுறைகள் மற்றும் அன்னிய முதலீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு எங்கள் வர்த்தகத்தை நடத்துவதோடு புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறோம். பிளிப்கார்ட் சந்தையில் 3 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையாளர்கள் உள்ளனர், இவர்களுடன் பிளிப்கார்ட்டின் பொருளாதார அமைப்பில் ஓர் அங்கம் என்றார்.
2018-ம் ஆண்டு அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்க 16 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. கடந்த ஆண்டு மேலும் 1.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.
இந்நிலையில் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முக்கியக் குற்றச்சாட்டு என்னவெனில் 2019-ம் ஆண்டு பிளிப்கார்ட் இரண்டு அடுக்கு முறையை உருவாக்கியது, புதிய வர்த்தகக் கூட்டாளிகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் சரக்கு இருப்பையும் சில்லரை வர்த்தக விற்பனை விலையையும் கட்டுப்படுத்துவதே பிளிப்கார்ட்டின் நோக்கம். “அதாவது இது வெறும் கண் துடைப்பு. தங்களது முழு சட்டவிரோத நடவடிக்கைகளை அரசின் பார்வையிலிருந்து மறைக்க உருவாக்கப்பட்டதே இந்த புதிய வர்த்தகங்கள்” என்கிறது வர்த்தகக் கூட்டமைப்பு.
இது போன்ற ஒரு பதிலி வர்த்தகக் கூட்டாளிகளை உருவாக்கியுள்ளோம் என்ற பெயரில் இந்திய அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகள், சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறைகள், வருமான வரி விதிமுறைகளை பிளிப்கார்ட் மீறியுள்ளது என்று வர்த்தகக் கூட்டமைப்பு விசாரணையும்ம் நடவடிக்கையும் கோரியுள்ளது.
ஆகவே, “8 கோடி வர்த்தகர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் பிளிப்கார்ட்டின் ஒட்டுமொத்த சட்டவிரோத நடவடிக்கைகளை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். அன்னிய நேரடி முதலீடு, ஜிஎஸ்டி, வருமான வரி விதிமீறல்களில் ஈடுபடுவதோடு, நிதி மோசடிகளில் ஈடுபடும் கவலைகள் ஏற்பட்டுள்ளது, எனவே எங்கள் உறுப்பினர்கள், இவர்களின் குடும்பத்தினர்கள், ஒட்டுமொத்த சில்லரை விற்பனைத்துறையையே இது பெரிய அளவில் பாதிப்படைவதற்கு முன்பு விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்” என்று இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தன் கடிதத்தில் கூறியுள்ளது.