தங்களின் புதிய ‘தனியுரிமைக் கொள்கை’ கடந்த மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தது வாட்ஸ்அப். அதன்படி தற்போது அது அமலிலும் இருக்கிறது. புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்களது வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படும் என்று சொல்லப்பட்டது, பின் அப்படி எல்லாம் ஆகாது என வாட்ஸ்அப் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்து வாட்ஸ்அப் பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, புதிய தனியுரிமைக் கொள்கைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வாட்ஸ்அப்பிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
“வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களின் தனியுரிமை, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பயனர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காதது போல் இருக்கிறது. மேலும், இந்தக் கடிதத்திற்கு ஏழு நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் வாட்ஸ்அப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.