சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான எல்லோ ரிவர் ஸ்டோன் காட்டில் (Yellow River Stone Forest) சனிக்கிழமை நடந்த 100 கிலோமீட்டர் ஓட்ட தூரம் கொண்ட அல்ட்ரா மாரத்தான் போட்டியின்போது அதிவேகமான காற்றுடன் கூடிய உறைபனி மழை பெய்தது.
மோசமான வானிலையில் சிக்கி இந்த போட்டியில் பங்கேற்ற சுமார் 172 வீரர்கள் மாயமானதை அடுத்து, போட்டி நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இந்த அதீத வானிலையில் சிக்கிய பலரும் ஹைப்போதெர்மியா என்னும் திடீர் உடல் வெப்பநிலை குறைவால் பாதிக்கப்பட்டு முடங்கினர்.
மாயமான வீரர்களில் 151 பேர் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள சூழ்நிலையில், அவர்களில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சில போட்டியாளர்கள் வெறும் அரைக் கால் சட்டை மற்றும் டி-ஷர்ட்டுகளையே அணிந்திருந்தனர்.