தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கொரோனா தொற்றை சமாளிக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க வெளிமாநிலங்களில் இருந்தும், மத்திய அரசிடம் இருந்தும் கூடுதலாக ஆக்சிஜன் பெற்று விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் முன்கள பணியாளர்களான சுகாதார பணியாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதார பணியாளர்களை தற்காலிகமாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது
இந்த 2,100 சுகாதார பணியாளர்களும் 6 மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2,100 சுகாதார பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் இவர்கள் தேவைக்கேற்ப பல்வேறு மாவட்டங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.